8 - அறிவியல் - அமிலங்கள் மற்றும் காரங்கள் - மதிப்பீடு - வினா - விடைகள்

 

அமிலங்கள் மற்றும் காரங்கள்


மதிப்பீடு


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. அமிலங்கள் ________ சுவையை உடையவை.

அ) புளிப்பு 

ஆ) இனிப்பு 

இ) கசப்பு 

ஈ) உப்பு

விடை: அ) புளிப்பு 


2. கீழ்க்காண்பவற்றுள் நீர்க் கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது ______________.

அ) அமிலம்

ஆ) காரம்

இ) அமிலம் மற்றும் காரம்

ஈ) இவற்றில் ஏதுமில்லை

விடை:இ) அமிலம் மற்றும் காரம்


3. நீல லிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் ______________ நிறமாக மாறுகிறது.

அ) நீல 

ஆ) பச்சை

இ) சிவப்பு 

ஈ) வெள்ளை

விடை:இ) சிவப்பு 


4. காரத்தை நீரில் கரைக்கும்போது அது ______________ அயனிகளைத் தருகிறது.

அ) OH-

 ஆ) H+ 

இ) OH 

ஈ) H

விடை:அ) OH-


5. சோடியம் ஹைட்ராக்சைடு ஒரு ____________ ஆகும்.

அ) அமிலம் 

ஆ) காரம்

இ) ஆக்சைடு 

ஈ) உப்பு

விடை:ஆ) காரம்


6. சிவப்பு எறும்பின் கொடுக்கில் ___________அமிலம் உள்ளது.

அ) அசிட்டிக் அமிலம் 

ஆ) சல்பியூரிக் அமிலம்

இ) ஆக்ஸாலிக் அமிலம் 

ஈ) ஃபார்மிக் அமிலம்

விடை:ஈ) ஃபார்மிக் அமிலம்


7. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு ___________ ஐ குணப்படுத்தப் பயன்படுகிறது.

அ) அமிலத்தன்மை 

ஆ) தலைவலி

இ) பற்சிதைவு 

ஈ) இவற்றில் ஏதும் இல்லை

விடை: அ) அமிலத்தன்மை


8. அமிலமும் காரமும் சேர்ந்து ___________ உருவாகிறது

அ) உப்பு மற்றும் நீர் 

ஆ) உப்பு

இ) நீர் 

ஈ) இவற்றில் ஏதும் இல்லை

விடை: அ) உப்பு மற்றும் நீர்


9. நாம் பல் துலக்குவதற்கு பற்பசையைப் பயன்படுத்துகிறோம் ஏனெனில் அது ________ தன்மை கொண்டது.

அ) காரம் 

ஆ) அமிலம்

இ) காரம் மற்றும் அமிலம் 

ஈ) ஏதுமில்லை

விடை: அ) காரம்


10. மஞ்சள் தூள் நிறங்காட்டியானது கார கரைசலில் மஞ்சள் நிறத்திலிருந்து __________ நிறமாக மாறுகிறது.

அ) நீலம் 

ஆ) பச்சை 

இ) மஞ்சள் 

ஈ) சிவப்பு

விடை:ஈ) சிவப்பு


II. கோடிட்ட இடத்தை நிரப்புக.


1. பென்சாயிக் அமிலம் __________ ஆக பயன்படுகிறது.

விடை: உணவு பதப்படுத்தி


2. ’புளிப்புச் சுவை’ என்பது இலத்தின் மொழியில் __________ என்ற சொல்லால் வழங்கப்படுகிறது.

விடை: அசிடஸ்


3. காரங்கள் ________ சுவையைக் கொண்டவை.

விடை: கசப்பு


4. கால்சியம் ஆக்சைடின் வேதிவாய்ப்பாடு __________

விடை: CaO


5. குளவியின் கொடுக்கில் __________ அமிலம் உள்ளது.

விடை: ஃபார்மிக்


6. உணவு தயாரிக்கப் பயன்படும் மஞ்சளானது __________ ஆக பயன்படுகிறது.

விடை: நிறங்காட்டி


7. செம்பருத்தி பூ நிறங்காட்டி அமிலக்கரைசலில் __________ நிறத்தைத் தருகிறது.

விடை: இளஞ்சிவப்பு


III.  சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றை திருத்தி எழுதுக.


1. பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரைவதில்லை.

விடை: தவறு

பெரும்பாலான அமிலங்கள் நீரில் கரையும்.


2. அமிலங்கள் கசப்புச்சுவை உடையவை.

விடை: தவறு

அமிலங்கள் புளிப்புச்சுவை உடையவை.


3. உலர்ந்த நிலையில் உள்ள காரங்களைத் தொடும்போது அவை  வழவழப்புத் தன்மையுடன் காணப்படும்.

விடை:தவறு

காரங்கள் திரவத்தில் கரைந்துள்ள போது வழவழப்புடன் காணப்படுகின்றன.


4. அமிலங்கள் அரிக்கும் தன்மையைக் கொண்டவை.

விடை:சரி


5. அனைத்துக் காரங்களும் அல்கலிகள் ஆகும். 

விடை: தவறு

அனைத்துக் காரங்களும் அல்கலிகள் அல்ல.நீரில் கரையும் காரங்கள் அல்கலிகள் ஆகும். 


6. செம்பருத்திப்பூ சாறு ஒரு இயற்கை நிறங்காட்டி ஆகும்.

விடை: சரி


IV. சுருக்கமாக விடையளி.


1. அமிலம் – வரையறு.


  • அமிலம் என்ற சொல்லானது புளிப்பு எனப் பொருள்படும் ’அசிடஸ்’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து வருவிக்கப்பட்டது.

  • புளிப்புச்சுவை கொண்ட வேதிச்சேர்மங்கள் பொதுவாக அமிலங்கள் எனப்படுகின்றன. 

  • நீரில் கரையும்போது ஹைட்ரஜன் அயனிகளை வெளியிடும் வேதிச்சேர்மங்கள் அமிலங்கள் என வரையறுக்கப்படுகின்றன.


2. அமிலங்களின் ஏதேனும் நான்கு இயற்பியல் பண்புகளை எழுதுக.


• அமிலங்கள் புளிப்புச்சுவை கொண்டவை. 

• அமிலங்கள் நிறமற்றவை.

• அமிலங்கள் நீரில் நன்கு கரைகின்றன. 

• அமிலங்களின் நீர்க்கரைசல் மின்சாரத்தைக் கடத்துகிறது.


3. அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் யாவை?


அமிலங்கள் மற்றும் காரங்கள் சில பண்புகளில் ஒத்துக்காணப்படுகின்றன அவையாவன;

• இவை இயற்கையில் அரிக்கும் தன்மை கொண்டவை. 

• இவை நீர்க்கரைசலில் அயனியாக்கத்திற்கு உட்படுகின்றன. 

• இவை நீர்க்கரைசலில் மின்சாரத்தைக் கடத்துகின்றன. 

• இவை நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுகின்றன.


4. அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயான வேற்றுமைகள் யாவை?


அமிலங்கள் மற்றும் காரங்களுக்கு இடையேயான வேறுபாடுகள்


அமிலங்கள்

காரங்கள்

இவை நீரில் H+ அயனிகளைத் தருகின்றன

இவை நீரில் OH_ அயனிகளைத் தருகின்றன.

இவை புளிப்புச்சுவை உடையவை.

இவை கசப்புச்சுவை உடையவை.

சில அமிலங்கள் திடநிலையில் காணப்படுகின்றன.

பெரும்பாலான காரங்கள் திடநிலையில் காணப்படுகின்றன.

அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகின்றன.

காரங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றுகின்றன.



5. நிறங்காட்டி என்றால் என்ன?


நிறங்காட்டி அல்லது அமில–கார நிறங்காட்டி என்பது ஒரு வேதிப் பொருளாகும். ஒரு வேதிப்பொருள் அமிலத்தன்மை உடையதா அல்லது காரத்தன்மை உடையதா என்பதை பொருத்தமான நிறமாற்றத்தின் அடிப்படையில் இது குறிக்கிறது.


6. நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன?


வேறுபட்ட வேதிப்பண்புகளைக் கொண்டுள்ள இரண்டு வேதிப்பொருள்கள் ஒரு வேதிவினையின் மூலம் நடுநிலை அடையும் நிகழ்வு நடுநிலையாக்கல் எனப்படும். 


7. காரங்களின் ஏதேனும் நான்கு வேதிப்பண்புகளை எழுதுக.


i. உலோகங்களுடன் வினை 

பொதுவாக காரங்கள் உலோகங்களுடன் வினைபுரிவதில்லை. அலுமினியம் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்கள் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் அலுமினேட்டையும் ஹைட்ரஜன் வாயுவையும் தருகின்றன.


ii. அலோக ஆக்சைடுகளுடன் வினை 

அனைத்துக் காரங்களும் அலோக ஆக்சைடுகளுடன் வினை புரிந்து உப்பு மற்றும் நீரைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, சோடியம் ஹைட்ராக்சைடு கார்பன் டைஆக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் கார்பனேட்டைக் கொடுக்கிறது.


iii. அம்மோனிய உப்புகளுடன் வினை 

காரங்கள் அம்மோனிய உப்புகளுடன் வினைபுரிந்து உலோக உப்புகள், அம்மோனியா வாயு மற்றும் நீரைத் தருகின்றன.


V. விரிவாக விடையளி


1. அமிலங்களின் பயன்கள் யாவை?


அமிலங்களின் பயன்கள்:

• நமது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவுப்பொருள்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.

• உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க வினிகர்(அசிட்டிக் அமிலம்) பயன்படுத்தப்படுகிறது.

• ஊறுகாய் போன்ற உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க பென்சாயிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

• குளியல் சோப்புகள் மற்றும் சலவை சோப்புகள் தயாரிக்க உயர் கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்புகள் அல்லது பொட்டாசியம் உப்புகள் பயன்படுகின்றன.

• சல்பியூரிக் அமிலம் வேதிப்பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. இது மிகச் சிறந்த நீர் நீக்கியாகச் செயல்படுகிறது. இது பல்வேறு வகையான சலவை சோப்புகள், வண்ணப்பூச்சுகள் (பெயிண்ட்கள்), உரங்கள் மற்றும் பல வேதிப்பொ ருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

• ஹைட்ரோகுளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமிலம் போன்றவை முக்கியமான ஆய்வகக் காரணிகளாகச் செயல்படுகின்றன. 

• அனைத்து உயிரினங்களின் செல்களும் நியூக்ளிக் அமிலங்களை அடிப்படைப் பொருளாகக் கொண்டுள்ளன. விலங்குகள் டி-ஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலத்தையும் (DNA) தாவரங்கள் ரிபோ நியூக்ளிக் அமிலத்தையும் (RNA) கொண்டுள்ளன. 



2. காரங்களின் பயன்கள் யாவை?


காரங்களின் பயன்கள் :

i) குளியல் சோப்புகள் தயாரிக்க பொட்டாசியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது. 

ii) சலவை சோப்புகள் தயாரிக்க சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது. 

iii) காகிதத் தொழிற்சாலை மற்றும் ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும், மருந்துகள் தயாரிக்கவும் சோடியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது. 

iv) வெள்ளை அடிக்க கால்சியம் ஹைட்ராக்சைடு பயன்படுகிறது. 

v) வயிற்றில் உருவாகும் அமிலத்தன்மையை நடுநிலையாக்க அலுமினியம் ஹைட்ராக்சைடு மற்றும் மெக்னீசியம் ஹைட்ராக்சைடு போன்ற காரங்கள் பயன்படுகின்றன. 

vi) உரங்கள், நைலான்கள், நெகிழிகள் மற்றும் இரப்பர்கள் தயாரிக்க அம்மோனியம் ஹைட்ராக்சைடு பயன்படுகின்றது.


3. நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் நடுநிலையாக்கல் வினைகளை விளக்குக.


தேனீ கொட்டுதல்: 

  • நம்மை சிவப்பு எறும்பு கடிக்கும்பொழுது அல்லது தேனீ கொட்டும்பொழுது ஃபார்மிக் அமிலமானது தோலினுள் உட்செலுத்தப்படுகிறது. 

  • இந்த அமிலமானது எரிச்சல் உணர்வினையும் வலியினையும் உண்டாக்குகிறது. 

  • வலி மற்றும் எரிச்சல் உணர்வுள்ள இடத்தில் கால்சியம் ஹைட்ராக்சைடை (வீடுகளில் பயன்படுத்தப்படும் நீற்றுச் சுண்ணாம்பு) தேய்த்து ஃபார்மிக் அமிலம் நடுநிலையாக்கப்படுகிறது.


குளவி கொட்டுதல்: 

  • குளவி கொட்டும்பொழுது, எரிச்சல் போன்ற உணர்வினையும், வலியினையும் நாம் உணர்கிறோம். 

  • இது குளவியால் நமது உடலில் செலுத்தப்படும் அல்கலி என்ற காரப்பொருளின் மூலம் ஏற்படுகிறது. 

  • இந்த காரத்தன்மையை நடுநிலையாக்க நாம் அமிலத்தன்மை கொண்ட வினிகரைப் பயன்படுத்துகிறோம்.


பற்சிதைவு: 

  • பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை நாம் பல் துலக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

  • நம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் பற்களுக்கு இடைப்பட்ட இடைவெளிகளில் சிக்கியுள்ள உணவுத் துகள்களைச் சிதைத்து அதன் மூலம் அமிலத்தை உருவாக்குகின்றன. 

  • இது பற்சிதைவுக்கு வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க நாம் அமிலத்தை நடுநிலையாக்க வேண்டும். 

  • வலிமை குறைந்த காரங்களைக் கொண்ட பற்பொடி அல்லது பற்பசையைக் கொண்டு பல் துலக்கும்போது அமிலமானது நடுநிலையாக்கப்படுகிறது.


அமிலத்தன்மை: 

  • நமது உடலில் கல்லீரல், பித்தப்பை மற்றும் கணையம் ஆகியவற்றால் சுரக்கப்படும் நொதிகளும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சேர்ந்து உணவுப் பொருள்களின் செரிமானத்திற்கு உதவுகின்றன. 

  • சிவயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகப்படியாக சுரப்பதால் உணவுக்குழாய் மற்றும் மார்புப் பகுதிகளில் எரிச்சல் உருவாகி, அது மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் வயிறு மற்றும் உணவுக்குழாய்களில் புண் உருவாகி, பாதிப்பு மேலும் அதிகரிக்கிறது. 

  • இதனை நடுநிலையாக்க வலிமை குறைந்த காரங்களான மெக்னீசியம் ஹைட்ராக்சைடு மற்றும் அலுமினியம் ஹைட்ராக்சைடு போன்றவற்றின் கலவை அமில நீக்கியாகப் பயன்படுகிறது. 

  • இதன் விளைவாக அமிலத்தன்மை நீக்கப்படுகிறது.


வேளாண்மை:

  • அதிக அமிலத்தன்மையுடைய மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. 

  • இதனைச் சரிசெய்வதற்கு விவசாயிகள் சுண்ணாம்பு (CaO), சுண்ணாம்புக் கற்கள் (CaCO3) அல்லது மரக்கட்டைகளை எரிப்பதால் கிடைக்கும் 

  • சாம்பல் ஆகியவற்றை மண்ணில் சேர்க்கின்றனர். இது மண்ணின் காரத் தன்மையை நடுநிலையாக்குகிறது.



4. மஞ்சள் தூளிலிருந்து எவ்வாறு இயற்கை நிறங்காட்டியைத் தயாரிப்பாய்?


இயற்கை நிறங்காட்டி என்பது இயற்கை மூலத்திலிருந்து பெறப்படும் வேதிப்பொருள் ஆகும்.


  • மஞ்சள் தூளில் சிறிதளவு நீரைச்சேர்த்து மஞ்சள் தூள் பசை தயாரிக்கப்படுகிறது. 

  • இது மை உறிஞ்சும் தாள் அல்லது வடிதாளின் மீது பூசப்பட்டு உலர்த்தப்படுகிறது.

  • ஒரு கரைசலின் அமில மற்றும் காரத் தன்மையைக் கண்டறிய மஞ்சள் தூள் நிறங்காட்டி பயன்படுகிறது. 

  • அமிலக் கரைசலில் மஞ்சள் நிறங்காட்டி எந்த ஒரு குறிப்பிடத்தக்க நிற மாற்றத்தையும் தராது. அது மஞ்சளாகவே இருக்கும். 

  • காரக் கரைசலில் அது மஞ்சள் நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறுகிறது.


VI. உயர் சிந்தனை வினாக்கள்


1. விணுபாலன் மற்றும் ப்ரியன் பள்ளியில் மதிய உணவினை எடுத்துக் கொள்கிறார்கள். விணுபாலன் எலுமிச்சை சோறும், பிரியன் தயிர் சோறும் சாப்பிடுகிறார்கள். எலுமிச்சை சோறு மற்றும் தயிர் சோறு இரண்டும் என்ன தன்மை உடையவை? அந்தச் சுவைக்குக் காரணம் என்ன?


  • எலுமிச்சை சோறு மற்றும் தயிர் சோறு இரண்டும் அமிலத் தன்மை உடையவை.

  • எலுமிச்சை சோறு மற்றும் தயிர் சோறு இரண்டும்  புளிப்புச்சுவை உடையதாக இருக்கும்.

  • எலுமிச்சையில் உள்ல சிட்ரிக் அமிலமும், தயிரில் உள்ள லாக்டிக் அமிலமும்  புளிப்புச்சுவைக்குக் காரணம் ஆகும்.


2. ஹேஸ்னாவும், கீர்த்தியும் நண்பர்கள். கீர்த்தியின் பற்களில் பற்சிதைவு இல்லை. ஆனால், ஹேஸ்னாவின் பற்களில் பற்சிதைவு உள்ளது. ஏன்? எதனால் பற்சிதைவு ஏற்படுகிறது?


  • நம் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் பற்களுக்கு இடைப்பட்ட இடைவெளிகளில் சிக்கியுள்ள உணவுத் துகள்களைச் சிதைத்து அதன் மூலம் அமிலத்தை உருவாக்குகின்றன. இது பற்சிதைவுக்கு வழி வகுக்கிறது. 

  • இதனைத் தடுக்க தினமும் இரண்டு முறை நாம் பல் துலக்க வேண்டும்.

  • பாக்டீரியாக்கள் உருவாக்கும் அமிலத்தை நடுநிலையாக்க குறைந்த காரங்களைக் கொண்ட பற்பொடி அல்லது பற்பசையைக் கொண்டு பல் துலக்கும்போ து அமிலமானது நடுநிலையாக்கப்படுகிறது. இதனால், பற்கள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

  • குளிர்பானங்கள்  அதிகமாகப் பருகுவதன் மூலமும் பற்கள் பாதிக்கப்படும்.

  • சரியாக, முறையாகப் பல் துலக்காததோலோ, அமிலம் சார்ந்த உணவுப்பொருள்களை அதிகமாக உட்கொண்டதாலோ ஹேஸ்னாவின் பற்களில் பற்சிதைவு ஏற்பட்டிருக்கலாம்.



Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்